துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி! கர்நாடகத்தில் பதவியேற்ற 2 நாளில் அமைச்சர் ராஜிநாமா!
கர்நாடக அமைச்சரவையில் துறை ஒதுக்கீட்டில் எழுந்த அதிருப்தியால் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜிநாமா...
கர்நாடக அமைச்சரவையில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைக்கு அதிருப்தி தெரிவித்து மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜிநாமா செய்துள்ளார்.
கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த புதன்கிழமை (ஜூன் 3) மாலை பதவியேற்றுக்கொண்டார். மேலும், அவருடன் 13 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
இந்த நிலையில், டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை குறித்து அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான ராமலிங்க ரெட்டி இன்று (ஜூன் 5) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
Advertisement
Advertisement
முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற 2 ஆவது நாளே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு, நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் பெங்களூரு வளர்ச்சித் துறையைக் கோரியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவர் கூறுகையில்,
”நான் சட்டப்பேரவை உறுப்பினராகவே தொடர விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகமாட்டேன். எனக்கு பெங்களூரு வளர்ச்சித்துறை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனது மனசாட்சிக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது. எனவே, நான் எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைக்கு அதிருப்தி தெரிவித்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து ராமலிங்க ரெட்டி வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.