கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சித்தராமையா தலைமையிலான... பிரியங்க் கார்கே கூறியதென்ன?
கர்நாடகத்தில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி குறித்து பிரியங்க் கார்கே தெரிவித்தது தொடர்பாக...
கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று முன்னாள் கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.
Advertisement
Advertisement
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து, சித்த ராமையாவை காங்கிரஸ் தலைமை ராஜிநாமா செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அவர் ராஜிநாமா செய்ததால் அடுத்த ஆட்சியை அமைப்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் நடைபெறுகிறது.
இது குறித்து பிரியங்க் கார்கே தெரிவித்ததாவது:
காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. இந்தக் குழு முதலில் சட்டப்பேரவைத் தலைவரை முடிவு செய்யும். அந்தத் தகவல் ஆளுநருக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும் என்ற அனைத்தும் சட்டப்பேரவைக் குழுவிடமே விடப்படும்.
முதல்வர் ராஜிநாமா செய்துவிட்டார். அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அடுத்த ஆட்சியில் யார் இடம் பெறுவார் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டும். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், சித்தராமையா தலைமையில் நடைபெற்ற பொருளாதார மற்றும் சமூகப் பணிகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்.