தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!
தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...
தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப். 13) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் சனிக்கிழமை வெளியிடப்பட்டு அது அனைத்து தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உள்ளிட்ட கூட்டமைப்பின் உயர்நிலை தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த நிலையில் தொழில்நுட்பம், கனிமவளம் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியத் தலைமையின் கீழ் மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய நான்கு தூண்களில் எங்கள் முயற்சிகளை ஒன்றிணைத்துள்ளோம்.
உங்கள் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், நமது தொலைநோக்குப் பார்வையை இரு தரப்பினருக்கும் வெற்றி தரும் ஒரு சூழலாக மாற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகம் அதிகரித்து வரும் பதற்றங்களைக் கண்டு வருகிறது. மேலும் அவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெருந்தொற்றுகள், காலநிலை பேரழிவுகள் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், எந்தவொரு நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை என்பதை நிரூபித்துள்ளன.
எனவே, பிரிக்ஸ் அமைப்புக்குள் மீள்திறனை மேம்படுத்துவதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். மேலும், தொழில்நுட்பம் மற்றும் கனிம வளத்தை ஆயுதமாக்குவதை பிரிக்ஸ் கூட்டமைப்பு எச்சரிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Prime Minister Narendra Modi warned on Sunday (Sept. 13) that technology and mineral resources should not be weaponized.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.