அடுத்த 6 மாதங்களில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை! யோகி ஆதித்யநாத்
அரசியல் தலையீடு இல்லாமல் வெளிப்படையான முறையில் தேர்வுகள் நடைபெறுவது பற்றி..
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
யுபிஎஸ்சி மூலம் பல்வேறு துறைசார்ந்த பணிகளுக்குத் தேர்வான 818 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் வகையில் லக்னௌவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
முந்தைய சமாஜ்வாதி கட்சி அரசு, யுபிஎஸ்சி பணிக்குத் தகுதியற்ற ஒருவரை உத்தரப் பிரதேசப் பொதுப் பணி ஆணையத்தின் தலைவராக நியமித்திருந்தாக அவர் குற்றம் சாட்டினார்.
Advertisement
Advertisement
2017-க்கு முன்பு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் குளறுபடிகளைச் செய்தவர்களிடம் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் இன்று முதல் பணி நியமன ஆணைகளை வழங்கத் தொடங்கியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்கப் போகிறோம்.
ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் தலையீடுயின்றி, பணி நியமன வாரியங்களும் தேர்வாணையங்களும் வெளிப்படையான மற்றும் நேர்மையான நடைமுறைகள் மூலம் தேர்வுகளை நடத்தும்போது, அதன் பலன்கள் தெளிவாகத் தெரியும். இன்றைய பணி நியமன ஆணை வழங்கும் விழாவிலேயே அதைக் காண முடிகிறது. இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது இது முதல் முறையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
முந்தைய அரசுகள் தங்கள் உறவினர்களையே பணி நியமன வாரியங்களிலும் தேர்வாணையங்களிலும் நியமித்தன. இதனால் அந்த முழு நடைமுறையின் நம்பகத்தன்மையும் முற்றிலும் சீர்குலைந்தது. ஒரு பணி நியமன நடவடிக்கை கூட நேர்மையான முறையில் நடத்தப்படவில்லை.
2017-க்கு முன்பு மிகவும் ஏழ்மையான மாநிலமாகவும், அடையாளச் சிக்கலில் தவித்த மாநிலமாகவும் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம், கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னேற்றமடைந்த மாநிலமாகத் திகழ்கிறது.
இது இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்வதுடன், நாட்டின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்துள்ளது. நாங்கள் இனி பின்தங்கிய நிலையில் இல்லை என்று அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.