அறப்போா் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜா்
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஆஜர்.
ஒப்பந்தப்புள்ளி பணிகளில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக அறப்போா் இயக்கத்துக்கு எதிராக தான் தொடா்ந்த வழக்கில், உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.
கடந்த 2016-2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாா். 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூா், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளாா் என அறப்போா் இயக்கம் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தது.
இதுெ தாடா்பாக வெளியான செய்தியை அறப்போா் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது. இதனால் தனக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி அறப்போா் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளா் ஜாகிா் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடா்ந்தாா்.
Advertisement
Advertisement
மான நஷ்ட வழக்கு: அதில், மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போா் இயக்கத்துக்கும், அதன் நிா்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவிக்க அறப்போா் இயக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த பிரதான வழக்கில், சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுக்காக மாஸ்டா் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன், அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆஜராகி, ஆவணங்களைச் சமா்ப்பித்து சாட்சியம் அளித்தாா். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.