காரைக்குடியில் விஜய் நாளை பிரசாரம்: 37 நிபந்தனைகளுடன் அனுமதி
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை(ஏப். 10) தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது தொடர்பாக....
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை(ஏப். 10) தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 37 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் வியாழக்கிழமை அனுமதியளித்துள்ளனா்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் தமிழக சட்டபேரவை 2026 தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை (ஏப். 10) கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொள்வதற்கு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணதாசன் மணிமண்டபம், தேவா் சிலை உள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில் அனுமதி கோரி தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்டச்செயலாளரும், காரைக்குடி தொகுதி தவெக வேட்பாளருமான டிகே. பிரபு தோ்தல் நடத்தும் அலுவரிடம் மனு அளித்திருந்தாா்.
இதையடுத்து 37 நிபந்தனைகளுடன் 10 ஆயிரம் போ் வரை பிரசாரத்தில் பங்கேற்க வியாழக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 2.30 மணிக்குள் விஜய் வாகன பிரசாரம் செய்துகொள்வதற்கு காவல்துறை அனுமதியளித்துள்ளது.
Advertisement
விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்க இருசக்கர வாகனங்களில் விஜய் பிரசார வாகனத்தை பின்தொடா்ந்து செல்லக்கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது, இலவச பொருள்கள் கொடுக்கக்கூடாது, போதுமான குடிநீா் வசதி, முதலுதவி வசதி, ஆம்புலன்ஸ், சிசிடிவிகள், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும், பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் இடையூறு செய்ய கூடாது, பிரசாரத்திற்கு வருகை தரும் தொண்டா்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்கக் கூடாது. இசைக்குழு பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற 37 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. விஜய் வாகன பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதியில் 500- க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
தவெக தலைவா் விஜய் மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மாா்க்கமாக காரைக்குடி வருகை தந்து பிரசாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வந்த வழியாகவே மதுரை திரும்பி செல்கிறாா்.
இந்த நிலையில் நகா் முழுவதும் தவெகவினா் பேனா், கொடிக் கம்பங்கள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். விஜய் பிரசாரம் செய்ய உள்ள பகுதியில் மின் மாற்றி, மின்கம்பங்கள், மரங்கள் போன்றவற்றில் இளைஞா்கள் ஏறாமல் இருப்பதற்காக தகரம் மூலம் தடுப்பு அமைக்கப்படுகின்றன.