நரம்பியல் பிரச்னை... 2ஆவது முறையாக மயங்கி விழுந்த கால்பந்து வீரர்!
பயர்ன் மியூனிக் அணியின் மிட்ஃபீல்டர் ஜமால் முசியாலா மீண்டும் மயங்கி விழுந்தது குறித்து...
பயர்ன் மியூனிக் அணியின் மிட்ஃபீல்டர் ஜமால் முசியாலா (23 வயது) இந்த வாரத்திலேயே இரண்டாவது முறையாக களத்தில் மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் இது கடுமையான வெப்பத்தால் ஏற்பட்டதெனக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு நரம்பியல் சார்ந்த பிரச்னை இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பிறந்த இவர் அந்த நாட்டிற்காகவும் கால்பந்து விளையாடி வருகிறார். புன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் ஜெர்மனி ஜெயன்ட்ஸ் என்றழைக்கப்படும் பயர்ன் மியூனிக் அணியில் அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார்.
Advertisement
Advertisement
நட்சத்திர வீரராக கருதப்படும் இவர் நட்புரீதியான போட்டியின் போது திடீரென சரிந்து விழுந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி ஆகுவது கவலையையும் அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை லைப்சிக் எதிரான ஆட்டத்தில் முதல்முறை மயங்கி விழுந்தார். அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ஹைடென்ஹெய்ம்க்கு எதிரான ஆட்டத்திலும் திடீரென சரிந்து விழுந்தார்.
இது குறித்து ஜமால் முசியாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கும் ஆதரவு அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. பலரும் கவலையுடன் இருப்பீர்கள் எனத் தெரியும். எளிதில் குணமாக்ககூடிய நரம்பியல் சார்ந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக என்னால் செயல்பட முடியாமல் சென்றுவிடும்.
இரண்டுமுறை நடந்துவிட்டது. முதலில் இது உங்களுக்குப் பார்க்க பயமாக இருக்கலாம். ஆனால், இது என் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதைத் தவிர்த்து பெரிய ரிஸ்க் எதுவுமில்லை. அதனால் பயர்ன் மியூனிக் அணி எனக்கு ஆதரவாக இருக்கிறது.
தொடர்ச்சியாக இது குறித்து வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வருகிறேன். உங்களின் ஆதரவின் மூலமாக நான் நலமுடன் இருப்பேன். தொடர்ச்சியாக விளையாடுவேன். இதைப் புரிந்து நீங்கள் எனக்கு இனிமேல் இது தொடர்பாக விவாதிக்க வேண்டாமென விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
Bayern midfielder Jamal Musiala reveals ''neurological'' issue after collapse during game for 2nd time
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.