FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வீட்டு மனையை பதிவு செய்வதில் சிக்கல் நீடிப்பு

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகம் முழுவதும் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகளால் தாங்கள்

Updated On : 5 ஜூன் 2017, 2:44 am IST
பகிர்:

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகம் முழுவதும் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகளால் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக மனை வணிக (ரியல் எஸ்டேட்) உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவையடுத்து, அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கி, அரசாணைகளை அரசிதழில் வெளியிட்டது.
அதன்படி, 2016, அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன்னதாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகள், அதனருகே உள்ள விற்பனை செய்யப்படாத மனைகளை மட்டுமே வரன்முறை செய்ய முடியும். இந்த நிலங்களை வரன்முறை செய்ய, அரசாணை வெளியான நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கை கடந்த 12-ஆம் தேதி மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம். ஏற்கெனவே, வீட்டுமனைகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின் கீழும் பத்திரப்பதிவு செய்யலாம். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை பத்திரப்பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு உள்பட்டதாகும். இதனடிப்படையில், பத்திரப்பதிவு செய்வதற்கான தடை தளர்த்தப்படுகிறது என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இதையடுத்து, மனை வணிக உரிமையாளர்கள் தமிழக அரசின் புதிய ஆணைப்படி வீட்டுமனைப் பிரிவை பத்திரப்பதிவு செய்வதற்காக சார்-பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றால், பத்திரப்பதிவு ஐஜியிடமிருந்து முறையான தகவல் வரவில்லை என்கின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அந்த அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கச் சென்றால், "வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முறையாக எப்படி அனுமதி அளிக்க வேண்டும் என்பது தொடர்பான விரிவான அறிக்கை வரவில்லை எனக் கூறி மனைவணிக உரிமையாளர்களை அலைக்கழித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூறியதாவது: கடந்த 9 மாதங்களாக பத்திரப்பதிவு நடைபெறாததால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம். இந்நிலையில், வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவைத் தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 2 வாரங்களாகியும் பத்திரப்பதிவு செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். பத்திரப் பதிவை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments