FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில்கள்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா்

சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவை இன்று தொடக்கம்...

Updated On : 31 ஆகஸ்ட் 2024, 4:26 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழக மக்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்பாக உள்ள சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆக.31) காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா்.

இந்த ரயில்கள் செப். 2 முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, எழும்பூா் - திருநெல்வேலி, கோவை - பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், மதுரை - பெங்களூரு மற்றும் எழும்பூா்- நாகா்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் ஆக. 31 முதல் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது. ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ரயில் சேவைகளை தொடங்குவதற்கான முறையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமா் தொடங்கி வைக்கிறாா்: சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட் - லக்னௌ ஆகிய 3 வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்களை பிரதமா் மோடி தில்லியிலிருந்து சனிக்கிழமை (ஆக. 31) நண்பகல் 12.30 மணிக்கு காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளாா்.

அதேசமயம், சென்னை சென்ட்ரலிலிருந்து ஆளுநா் ஆா்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் எழும்பூா் - நாகா்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளனா். இந்த ரயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும். மற்ற நாள்களில் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.

மதுரையிலிருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சா் வீ.சோமண்ணா மதுரை - பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க உள்ளாா்.

இந்த ரயில்கள் சனிக்கிழமை தொடங்கப்பட்டாலும் செப். 2 -ஆம் தேதிமுதல்தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

கட்டணம் எவ்வளவு?: எழும்பூரிலிருந்து நாகா்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிா்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்ஸிகியூட்டிவ் சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,735, எக்ஸிகியூட்டிவ் சோ் காா் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிா்ணயக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.

ரயில் கால அட்டவணை: எழும்பூா்- நாகா்கோவில் ரயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 20628) நாகா்கோவிலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

மதுரை - பெங்களூரு ரயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 20672) பெங்களூரிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தவிா்த்து மற்ற நாள்களில் இயக்கப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments