திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் இரண்டு நாள்கள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். மேலும், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைத்தனர். இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரவீந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருள்களை திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தனர். இந்த தடை உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அவரது தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஸ் குமாரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(டிச. 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் விகாஷ் குமார் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார்.
உதவி இயக்குநர் விகாஷ் குமார் மன்னிப்புக் கேட்டதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.