தமிழ்நாட்டில் இப்படி ஒரு நீர்வளத் துறை அமைச்சரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது? உதயநிதி
தவெக அரசைக் கண்டித்து தஞ்சை பனகல் கட்டடம் முன்பு திமுக சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது....
தமிழ்நாட்டில் இப்படி ஒரு நீர்வளத் துறை அமைச்சரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது? என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவெக அரசைக் கண்டித்து தஞ்சை பனகல் கட்டடம் முன்பு திமுக சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை முதல்வர் வாயில் இருந்து பாஜக என்று ஒருவார்த்தைக் கூட வரவில்லை. முதல்வர் அவ்வளவு பெரிய தைரியசாலி. தில்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிர காவல் துறை அவர்களை வழிமறித்து பாதியில் இறக்கிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கே அனுப்பிவைத்துவிட்டனர்.
இதைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் அறிக்கைகள் விட்டனர். இதைப் பற்றியும் முதல்வர் வாய்த் திறக்கவில்லை. ஏன், மகாராஷ்டிரத்தில் நடப்பது பாஜக ஆட்சி. முதல்வர்தான் இப்படி என்றால் நீர்வளத் துறை அமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு அமைச்சரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. பத்திரிக்கையாளர்களை பார்த்தாலே திருடன் மாதிரி ஓடுகிறார். வேளாண் துறை அமைச்சர் ஒருத்தர் இருக்கிறார்.
Advertisement
Advertisement
அவர் வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்கு கொண்டு சென்று பூஜை போட்டுவிட்டு வருகிறார். இப்படி மொத்த அமைச்சரவையும் ஒரு ஜோக்கர் கூட்டமாக தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியில் முதல்வர் ரிலீஸ் போடுகிறார். அமைச்சர்கள் ரிலீஸ் போடுறாங்க. விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் சினிமா தியோட்டருக்குப் போய் கண்ணீர் வடிக்கின்றனர். யார் அமைச்சர் என அதிகாரிகளுக்கே தெரியவில்லை.
யார், யார் அமைச்சர் என முதல்வருக்கே தெரியாது. காவிரி விவகாரத்தில் திமுக சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக கஷ்டங்களை அனுபவிப்பது விவசாயிகள் தான். 45 டிஎம்சி தண்ணீரை பெற தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி பிரச்னையை மடைமாற்ற மெட்ரோ ரயிலில் ஆய்வுக்கு செல்கிறார் முதல்வர் விஜய்.
ஏதாவது பிரச்னை வந்தால் மக்களை எப்படி திசை திருப்பலாம் என்றுதான் முதல்வர் யோசிக்கிறார். திமுகவின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போராடுவதாகக் கூறி கொச்சைப்படுத்தியவர் முதல்வர் விஜய். தயவு செய்து இந்த பக்கம் வந்துவிடாதீர்கள் என முதல்வர் விஜய்யிடம் கர்நாடக முதல்வர் கூறிவிட்டார். நேற்று கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களது ஒற்றுமையை காட்டி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி, இதைப் புரிந்துகொண்டு மேக்கேதாட்டுவில் அணி கட்ட கர்நாடகம் துடிக்கிறது.
காங்கிரஸின தயவு வேண்டும் என்பதால் கர்நாடகத்தை கேள்வி கேட்க முதல்வர் விஜய்க்கு பயம். ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50,000க்குள் வாங்கினால் மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவித்தார்கள். ரூ.35,000க்கு மேல் யாருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை என்பதே தற்போதைய நிலை. தேர்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்த பிரச்னைகளை சும்மாவிட மாட்டோம். விவசாயிகளின் குரலாக திமுக ஒலிக்கும் என்று தெரிவித்தார்.
Leader of the Opposition and DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin stated, 'You could have never seen a Water Resources Minister like this in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.