பட்ஜெட் 2026! தமிழுக்கென பிரத்தியேக செய்யறிவு மாதிரி உருவாக்கப்படும்!
தமிழுக்கென பிரத்தியேக செய்யறிவு மாதிரி உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
தமிழுக்கென பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் தமிழ் வளர்ச்சி துறை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில்,
Advertisement
Advertisement
”தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதிலும் நமது அரசு உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. செம்மொழியான தமிழ்மொழியின் இலக்கியத்தின் மீது இளம் வயதிலேயே பற்றுணர்வை வளர்க்கும் நோக்கில், 300 திருக்குறள்களை மனனம் செய்து ஒப்புவிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகையினை அரசு வழங்கும்.
மேலும், தமிழ் அறிஞர்களுக்கான நிதி உதவியை அரசு உயர்த்தி வருவதுடன், தமிழ்மொழித் தியாகிகளின் ஒப்பற்ற பங்களிப்பினை நினைவுகூறும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை அரசு தொடர்ந்து நடத்தும்.
கண்ணியமிகு காயிதே மில்லத்தின் வரலாற்றுப் பெருமையைப் போற்றும் வகையிலும், தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றினைக் கொண்டாடும் வகையிலும் ஒரு புதிய விருது ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளன்றும் காயிதே மில்லத் அவர்களின் நினைவாக வழங்கப்படும்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் தமிழ்ப் பெருந்திரள் மொழி மாதிரி உருவாக்குதல், அரசின் அதிகாரப்பூர்வ தொடர்புகளை செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழித் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு செயல்படுத்துதல் மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழுக்கென பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்குதல் ஆகியவை முன்னெடுக்கப்படும்.
உலகப் புகழ்பெற்ற தொல்லியல் தலங்களையும், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பண்பாட்டு மரபையும், நகர நாகரிகத்தையும் தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. புத்தக அறிவுடன் கள அறிவும் வேண்டும் எனும் நோக்கத்தில், பள்ளி மாணவர்கள் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சாளுவன்குப்பம் மற்றும் காவேரிப்பூம்பட்டினம் போன்ற தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் பாரம்பரிய தலங்களை பார்வையிடுவது அவசியமாகும்.
இது, அனுபவம் சார்ந்த கற்றலை ஊக்குவிப்பதுடன், மாநிலத்தின் தொன்மையான வரலாறு, நாகரிகம் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம் குறித்த அவர்களது புரிதலையும் வலுப்படுத்தும். இந்த நோக்கில், பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் தலங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக இந்த அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
Finance Minister Maria Wilson announced in the Tamil Nadu budget that an artificial intelligence model exclusively for Tamil would be developed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.