வேளாண் பட்ஜெட்! தவெக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை! - சிபிஎம்
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து...
தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண் அமைச்சர் வினோத் இன்று (ஆக. 6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலைப்பாடுகள் மற்றும் அம்சங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமெனவும், தவெக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம், வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 1000 விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
நிதிநிலை அறிக்கையில் விவசாயத்தில் இயந்திரமயம் என்பதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தில் வேலை கிடைக்காமல் புலம்பெயர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது.
மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலிபோது தவெகவால் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை. பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
CPIM has stated that TN agricultural budget should be framed in a manner that satisfies farmers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.