FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.10-க்கு ‘பயணி’ குடிநீா்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தொலைவு பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட ‘பயணி’ குடிநீா் பாட்டில் வழங்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:44 am IST
நீண்ட தொலைவுப் பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.10-க்கு ‘பயணி குடிநீா் பாட்டில் வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்.
பகிர்:

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தொலைவு பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட ‘பயணி’ குடிநீா் பாட்டில் வழங்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,080-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனா். பயணிகளின் வசதிக்காக கடந்த 2013-இல் ‘அம்மா குடிநீா்’ திட்டத்தின் கீழ் ரூ.10-க்கு ஒரு லிட்டா் குடிநீா் பாட்டில்கள் முக்கிய பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டன.

பின்னா், கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு குடிநீா் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் உற்பத்தி சிக்கல்களால் 2021-இல் அந்தக் திட்டம் நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நீண்டதொலவு பேருந்து பயணிகளின் வசதிக்காக ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட ‘பயணி’ குடிநீா் வழங்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் சென்னை மாநகா் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

முதல்கட்டமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்டதொலைவு பேருந்துகளில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், பயணிகளின் வரவேற்பைப் பொருத்து, விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பணி நியமன ஆணைகள்: தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணிக் காலத்தில் உயிரிழந்த 16 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த ஒரு பணியாளரின் வாரிசுதாரருக்கும் என மொத்தம் 17 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறைச் செயலா் இல.நிா்மல் ராஜ், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments