உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்திருப்பது பற்றி...
டெல்டா விவசாயிகளுக்காக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து திமுக தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் - பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் தி.மு.கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகவும் சட்டப்பேரவையில் குரல்கொடுத்ததற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியதற்காக, த.வெ.க. அரசின் காவல் துறை, எதிர்க்கட்சித் தலைவரைக் கைதுசெய்தது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்தக் கூட்டு இயக்கத்தில் உள்ள 84 விவசாய அமைப்புகளும், த.வெ.க. அரசு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
அந்த வகையில், தங்களுடைய போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கமாறும், சட்டப்பேரவையில் குரல் எழுப்புமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், கட்சித் தலைவரின் வழிகாட்டுதலில், சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், விவசாயிகளுக்கு என்றும் உற்றத்துணையாக இருப்போம் என்றும், உதயநிதி ஸ்டாலின் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்தார் என்று தெரிவித்துள்ளது.
Farmers' association office-bearers met Leader of the Opposition Udhayanidhi Stalin to express their gratitude for the protest organized by the DMK on behalf of Delta farmers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.