விஜய்க்கு நாட்டுநடப்பு தெரியவில்லை! இபிஎஸ்
விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு இபிஎஸ் பதிலளித்திருப்பது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் விமர்சனங்களுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்பாகவும், அதிமுக குறித்தும் விஜய்யின் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
Advertisement
Advertisement
அவர் தெரிவித்ததாவது:
”தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. விஜய் பொதுவெளியில் வந்து பார்த்தால்தான் தெரியும். ஒரு சம்பவத்துக்குப் பிறகு வெளியவே வராமல், நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை, எந்தக் கட்சி யாருடன் கூட்டணி எனத் தெரியவில்லை. கூட்டணிக்கு யார் தலைமைத் தாங்குகிறார் என்றும் தெரியவில்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட முதல் பேட்டியிலேயே அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எனத் தெரிவித்தார். இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று தெளிவாக கூறப்பட்டது. இதை விஜய் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை, பார்ப்பதற்கு நேரம் இல்லை. மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை. அவர் பேசுவதை வைத்து கேள்வி கேட்க வேண்டாம். ஒருமுறையாவது பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும்.
எங்களை எப்படி ஊழல் கட்சி என்று கூறமுடியும்? ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் முன்னுதாரணமாக கூறியுள்ளார். எனது ஆட்சியில் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை நீதிமன்றம் வரை சென்று குற்றமற்றவர் என்று நிரூபித்துள்ளேன். எங்கள் கட்சியில் இருந்து சென்றவர் (செங்கோட்டையன்) ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று வந்தவர். அவரைதான் விஜய் கட்சியில் சேர்த்துள்ளார்” எனத் தெரிவித்தார்.