முதல்வர் விஜய்யின் தொகுதி மறுவரையறை தனித் தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!
முதல்வர் விஜய்யின் தொகுதி மறுவரையறை தனித் தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளதைப் பற்றி...
அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை தனித் தீர்மானத்தை எதிர்ப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சமீபத்தில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.
Advertisement
Advertisement
இந்தத் தனித் தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரத்தில், பாஜகவைச் சேர்ந்த ஒரேயொரு எம்.எல்.ஏ. போஜராஜன், பாமக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் பேசுகையில், ”தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு தெளிவானது. மாநிலங்களுக்கு குறிப்பாக பிறப்பு விகிதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களில் 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கான விகிதாசாரத்தைக் குறைக்கக் கூடாது.
தமிழ்நாட்டுக்குத் தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் 7.18 சதவிகித விகிதாசார பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரையறையில் குறைந்துவிடக்கூடாது. இதுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.
தற்போது மத்திய அரசின் தொகுதி மறுவரையறையில் 7.18 சதவிகித விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இல்லாததால், ஏப். 14 ஆம் தேதி மாலை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்” என்று உறுதியளித்திருந்தார்.
இதன்படி, 7.18 சதவிகித விகிதாசாரப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் தமிழ்நாட்டுக்கான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்து 50 சதவிகிதம் வரை எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால்தான் தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்படுகிறது.
நிர்வாக வசதிகளுக்காக ஊராட்சிகள், பேரூராட்சிகள் பிரிக்கப்படுகின்றன. அதேபோன்று, நான் (இபிஎஸ்) முதல்வராக இருந்தபோது 6 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.
தற்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு அரசியல் காரணங்களுக்காகவும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவசர, அவசரமாக தனித்தீர்மானம் கொண்டுவந்திருப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம்.
மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறை சாதகமா? பாதகமா? என்று தெரியாமல், அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது. மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம்” என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami stated that he opposes the separate resolution on constituency delimitation, which has been introduced for political reasons.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.