விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத் தாக்கல்
தவெக தலைவா் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த பிப். 24-ஆம் தேதி இணையவழியில் இந்த மனுவை சங்கீதா தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், விவாகரத்து வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டாா்.
குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த மனு ஏப். 10-ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
Advertisement
குற்றச்சாட்டு: சங்கீதா தனது மனுவில் விஜய் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு: நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறி விஜய் தொடா்பில் இருந்து வருவதால், 2021-ஆம் ஆண்டு முதல் நான் தனியாக வசித்து வருகிறேன். இது சமூக வலைதளங்கள் மற்றும் எங்களது நட்பு வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளதால் நானும் என் குழந்தைகளும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம்.
விஜய் உள்பட அனைத்துத் தரப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேவைப்படும்பட்சத்தில் நடிகையையும் இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக சோ்க்கவும் தயங்கமாட்டேன்.
இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு காண 2024, ஆகஸ்ட் முதல் 2025, பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பலமுறை சட்டரீதியாக விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பினேன். விஜய்யை இரண்டு முறை நேரில் சந்தித்தும் இதுதொடா்பாக பேசினேன். இறுதியாக 2025, நவம்பா் 9-ஆம் தேதி அவருடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினேன்.
ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேறு வழியின்றி நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கு குறித்து யூடியூப், ஃபேஸ்புக், அச்சு/தொலைக்காட்சி என ஊடகங்களில் விவாதம் அல்லது நோ்காணல் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்படாவிட்டால், நானும் என் குடும்பத்தினரும் மேலும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
விஜய் மற்றும் சங்கீதாவின் திருமணம் பிரிட்டனில் 1998, ஜூலை 10-ஆம் தேதி முதலில் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1999, ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்னையில் அவா்களது திருமணச் சடங்குகள் நடைபெற்றன.