வெல்லும் கொடி! உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியை கொண்டாடும் தவெகவினர்!
வெல்லும் கொடி என்று கூறி, உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியைக் கொண்டாடும் தவெகவினர்!
பிஃபா உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் ஸ்பெயின் வென்றதை தவெகவினர் தங்களுடைய வெற்றியைப் போல கொண்டாடி வருகிறார்கள்.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், தவெகவின் கொடியும், ஸ்பெயின் கொடியும் மஞ்சள் - சிவப்பு என ஒன்றுபோல இருப்பதால், வெல்லும் கொடி என தவெகவினர் கால்பந்து வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Advertisement
Advertisement
உலகின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான பிஃபா உலகக் கோப்பை போட்டியை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் இணைந்து நடத்தின. 48 அணிகள் பங்கேற்று விளையாடியிருந்தன. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இறுதிப்போட்டி, மிகவும் பரபரப்பாக நடபெற்றது. இதில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகின் பல இடங்களில் நேரலையாக கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். ஸ்பெயின் வெற்றி பெற்றதால், அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தவெகவினரும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
காரணம், ஸ்பெயின் அணியின் கொடி போலவே தவெக கட்சிக் கொடியும் இருக்கும். நடுவில் மஞ்சள், இரண்டு ஓரங்களிலும் சிவப்பு என்பதை மையமாகக் கொண்ட கொடி என்பதால், தவெக தலைவர், முதல்வர் விஜய்யின் ஆசி பெற்ற ஸ்பெயின் அணி வெற்றி பெற்றதாகக் கூறி, தவெகவினர் ஸ்பெயின் அணியின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.
2026ஆம் ஆண்டில் வெல்லும் கொடி என்று தவெக கொடியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களது உற்சாகத்தைவெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
2026 மே 4ஆம் தேதி தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இன்று பிஃபா கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வென்று சாம்பியன் ஆனது என்பதை குறிக்கும் வகையில் இரண்டு கொடிகளையும் சேர்த்து பலரும் சமூக வலைத்தளத்தில் வெல்லும் கொடி என பதிவிட்டு வருகிறார்கள்.
ஸ்பெயின் அணி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது, தங்களது சொந்த வெற்றியாகவே தவெகவினர் கருதுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தவெக தலைவர், முதல்வர் விஜய், தவெகவின் கொடியை அறிமுகப்படுத்தியபோதே, இது ஸ்பெயின் நாட்டின் கொடி போல இருக்கிறது என்ற கருத்துகள் பகிரப்பட்டிருந்தன. தவெக கொடியில் மஞ்சள் நிறப் பகுதியில் இரண்டு போர் யானைகளும், வாகை மலரும் இடம்பெற்றிருக்கும்.
இந்த கொடியின் பின்னணி என்னவென்றால்,நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என சமத்துவத்தைக் குறிக்கும் சிவப்பு நிறம், வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்பதற்காக மஞ்சள் நிறம், வெற்றியின் குறியீடாக வாகை மலர், எதிரிகளை வீழ்த்தும் போர் யானைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
A victorious flag! TVK members celebrate the Spanish team that won the World Cup!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.