சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!
சென்னை - செய்யாறு சிப்காட் பகுதியை இணைக்க நான்கு வழி சாலை அமைப்பதற்காக போடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளதைப் பற்றி...
சென்னை - செய்யாறு சிப்காட் பகுதியை இணைக்க நான்கு வழி சாலை அமைப்பதற்காக போடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு அரசு துறைகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து டெண்டர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி, திட்டங்களின் மதிப்பீட்டு செலவைக் குறைக்கும் நோக்கில் சில டெண்டர்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையுடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் பகுதியை இணைக்கும் வகையில், 43 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கடந்த மார்ச் 10 ஆம் தேதி புலிவாயலில் இருந்து மனமதி இடையே 15.30 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை 2 பக்க சர்வீஸ் சாலையுடன் அமைக்கவும், பழவேரியிலிருந்து புலிவாய்க்கு 13.40 கி.மீ.க்கு 2 பக்க சர்வீஸ் சாலையுடன் 4 வழி நெடுஞ்சாலை அமைக்கவும், வளையகரணையில் இருந்து பழவேரிக்கு 14.50 கி.மீ. நீளமுள்ள 4 வழிச்சாலை அமைக்கவும் டெண்டர் விடப்பட்டது.
நான்கு வழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு இதற்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 33 கிராமங்களில் மொத்தம் 619 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, 60 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டன.
சென்னையையொட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்காட், சிட்கோ உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், செய்யாறு சிப்காட் வளாகத்தைச் சுற்றிய பகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. இதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை துறைமுகம், தென் சென்னை, ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதிகளில் இருந்து செய்யாறு நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாகவே பயணிக்க வேண்டிய நிலை உள்ளதால், விரைவிலேயே புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TVK government has cancelled 43 km Four-Lane Highway to Connect Chennai with the Cheyyar Industrial estate tender
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.