FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பற்றி....

Updated On : 31 ஜூலை 2026, 7:03 pm IST
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம்.
பகிர்:

தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு முதல்வரால் இக்கூட்டத்தில் பின்வரும் பொருண்மைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

i. அணைகளில் நீர் இருப்பு / நீர்த்தேக்க அளவு.

ii. தமிழ்நாட்டில் தற்போதுவரை பெய்துள்ள தென்மேற்குப் பருவமழையின் அளவு, மழை அளவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களில் உள்ள நிலவரம்.

iii. நகர மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம்.

iv. நடைபெற்றுவரும் வேளாண் பணிகள் மற்றும் குறுவை சாகுபடிநிலை, வேளாண் பயிர்களுக்கான குறுவைத் தொகுப்பு விநியோகம்.

v. கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கையிருப்பு.

vi. குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடு.

தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் மாதம் முதல் இன்று வரை (31.07.2026) மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாகப் பெய்துள்ளது.

குறிப்பாக, 20 மாவட்டங்களில் (சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, கரூர், ராணிப்பேட்டை, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர்) 19 முதல் 59 சதவீதம்வரை இயல்பைவிடக் குறைவாகவும், செங்கல்பட்டு மற்றும் இராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் 60 சதவீதத்திற்குக் குறைவாகவும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் குடிநீர் ஆதாரத்தைப் பலப்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது. எனவே, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், தலைமை நீரேற்ற நிலையத்திலுள்ள நீர் உறிஞ்சு கிணறுகளை புனரமைத்தல், கூடுதல் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்தல், நீரோட்ட திசைமாற்றுக் கால்வாய் அமைத்தல், பழுதடைந்துள்ள மின்சார வடங்களை மாற்றியமைத்தல், மின்மாற்றிகளில் உள்ள பழுது நீக்கம், மின்சாரத் தடையால் நீர் உந்து குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க வால்வு மற்றும் உரிய சாதனங்களை மாற்றியமைத்தல், பழைய நீர் இறைப்பான்களைப் புதிதாக மாற்றுதல், பழுதடைந்த குழாய்களை மாற்றுதல் மற்றும் அத்தியாவசியமான இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான குடிநீரினைத் தங்குதடையின்றி வழங்க ஆணையிட்டுள்ளார்.

வேளாண்மை - உழவர் நலத்துறையில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 30.07.2026 வரை 2,85,350 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 134 கோடி ரூபாயில் இதுவரை 16.93 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறுவைத் தொகுப்புத் திட்டத்தினை 15.08.2026-குள் வழங்கி முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பணியினை வேளாண்மைத் துறை விரைந்து முடித்திட முதல்வர் அறிவுறுத்தினார்.

வறட்சியான சூழல் நிலவி வருவதால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் வட்டார அளவில் சேமித்து வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்திட, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் - மீனவர் நலத்துறைக்கு 10 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டார்.

மாநிலத்தின் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் உரிய மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை, குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசியத் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

CM Vijay Orders Allocation of Rs 340 Crore for Drinking Water and Essential Works in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments