பிறந்தநாளில் உருவாகிறதா அண்ணாமலையின் புதிய கட்சி?
புதிய கட்சி தொடங்குகிறீர்களா? என்ற கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில் தொடர்பாக...
புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பொறுமையாக உட்கார்ந்து 2 நாள்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்சி தொடங்கும் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல், 2 நாள்களில் பதில் அளிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளதால், ஜூன் 4 ஆம் தேதி, பிறந்தநாளன்று அண்ணாமலை தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.
தில்லிக்குச் செல்ல சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையின் காரில் முன்பு இருந்த பாஜக கொடி, தற்போது இடம்பெறவில்லை.
Advertisement
Advertisement
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகவுள்ளதாகவும் விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் இதன்மூலம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன.
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் என தமிழக மக்களிடையே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை வரவேற்பை பெற்றிருந்தார்.’
ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், மாநிலத் தலைவர் பதவியிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவுக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் நிலவியதாக தகவல்கள் வெளியான நிலையில், பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பாஜக வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில், அண்ணாமலை பிறந்த நாளான ஜூன் 4 ஆம் தேதி, மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 2 நாள்களில் பொறுமையாக அமர்ந்து பதில் கூறுகிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டார்.