செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் சென்ற அண்ணாமலை! காரணம் என்ன?
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் சென்ற அண்ணாமலை குறித்து....
கோவை விமான நிலையம் வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில், எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அவர் சென்றுள்ளார்.
பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு சாதகமில்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பதாக கட்சியின் மேலிடத்திடம் அண்ணாமலை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் சுதாகா் ரெட்டி, மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்பார் என்ற எதிா்பார்ப்பு அக்கட்சியினருக்கு மத்தியில் இருந்தது. ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்வில்லை.
கோவை சிங்காநல்லூர் அல்லது அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்விரண்டு தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கவில்லை.
இந்தச் சூழலில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், இதுதொடர்பாக தனது நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் மூலம் அண்ணாமலை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கிறீர்களா? அரசியல் களம் எவ்வாறு உள்ளது? கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அண்ணாமலை சென்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.