அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர்
அதிமுக விவகாரம் குறித்து சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேட்டி...
அதிமுகவின் இரு தரப்பினர் வழங்கியிருக்கும் மனுக்களை பரிசீலித்து நாளை முடிவை அறிவிக்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்த நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது இரு அணிகளும் ஒன்றிணைந்துள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் சென்று, கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து, முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி. வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் நேரில் சந்தித்தனர்.
இருவர் தரப்பிலும் நடவடிக்கை கோரி வழங்கப்பட்ட கடிதங்களை திரும்பப் பெறுவதாக பேரவைத் தலைவரிடம் மனு அளித்தனர். அவர்களிடம் மனுக்களை பெற்ற பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அதனை சரிபார்த்தார்.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்து நாளை காலை முடிவை அறிவிப்பதாக ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.