கலைஞரால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்... சாலமன் பாப்பையா மறைவுக்கு உதயநிதி இரங்கல்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா (90), சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
சுந்தரம் சாலமன் பாப்பையா என்ற இயற்பெயர் கொண்டவர். 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்தார்.
Advertisement
Advertisement
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-ஆவது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் உள்பட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், “தமிழறிஞர் - பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். கழகத்தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர்.
தனது நகைச்சுவை கலந்த கருத்தாழமிக்க பேச்சினால், கடைக்கோடி மக்களிடமும் பட்டிமன்றங்களை கொண்டு சேர்த்தவர். ஏராளமான அடுத்த தலைமுறை தமிழ் பேச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்கள் இல்லாத விழாக்காலங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களின் அன்பை பெற்றவர்.
அவரின் மறைவு, பேச்சு உலகிற்கும் - பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு. அய்யா சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் - நண்பர்கள் - பட்டிமன்ற ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பணிகள் என்றென்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Udhayanidhi condoles the passing of Solomon Pappaiah
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.