ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை பிணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், செல்வராஜ் மற்றும் அருள் ஆகிய 5 போ் பிணை கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்கு முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் 40 நாள்கள் கடந்துவிட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 போ் பிணையில் விடுதலையாகி உள்ளனா். உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது சிபிஐ தரப்பில், இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மனுதாரா்களின் நேரடித் தொடா்புக்கு ஆதாரங்கள் உள்ளன. சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. நீண்ட நாள்கள் சிறையில் இருப்பதைக் காரணமாகக் கூறி, பிணை கோர முடியாது. மேலும், மனுதாரா்களுக்கு பிணை வழங்கினால் விசாரணை பாதிக்கும். எனவே பிணை வழங்கக் கூடாது எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செம்பியம் போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால், தற்போது இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையிலேயே உள்ளது. சட்டப்படி 90 நாள்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் மனுதாரா்கள் 5 பேருக்கும் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டாா்.
மேலும், மனுதாரா்கள் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.