பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!
திருச்சி அருகே 5-வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பற்றி....
திருச்சி அருகே 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5-வது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டக் களத்திற்கு சனிக்கிழமை நேரில் வருகை தந்த வேளாண்மைத் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Advertisement
Advertisement
அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய அறநிலையத் துறை அமைச்சர், முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்கிறார். விவசாயிகளுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கு அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ3,000 கோடி நிதி தேவைப்படுவதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.
மேலும், தற்போது இடைத்தேர்தல் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய அறிவிப்புகளை உடனடியாக வெளியிட முடியாத சூழல் உள்ளது எனத் தெரிவித்த அமைச்சர், இக்கோரிக்கையை பரிசீலிக்க 20 நாட்கள் அவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 20 நாட்கள் அவகாசம் கோரியதைக் கண்டித்து, அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
விவசாயிகளின் எதிர்ப்பும் கோஷங்களும் தீவிரமடைந்ததை அடுத்து, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து, அமைச்சர்கள் தங்களது பேச்சுவார்த்தையைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றனர்.
அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், "பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு தரப்பில் இருந்து தெளிவான மற்றும் உறுதியான அறிவிப்பு வெளியாகும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தடையின்றித் தொடரும்" எனத் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சமயபுரம் பகுதியில் விவசாயிகளின் தொடர் காத்திருப்புப் போராட்டம் மேலும் தீவிரமடைந்து நடைபெற்று வருகிறது.
Talks held by ministers with farmers, who have been engaged in a continuous protest for the 5th day near Trichy, ended in failure
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.