FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா

சிங்கப்பூரில் இருபதுக்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்டாலும், ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளே ஆட்சி மொழிகளாகும்.

Updated On : 22 மார்ச் 2026, 4:03 am IST
பகிர்:

சிங்கப்பூரில் இருபதுக்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்டாலும், ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளே ஆட்சி மொழிகளாகும். அந்த நாட்டின் கடந்த இருநூறு ஆண்டு வரலாற்றில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது.

சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கும் சிங்கப்பூரில் வளர் தமிழ் இயக்கமானது செம்மொழியான தமிழை வாழும் மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு,  அனைத்து வயதினரையும் தமிழால் ஒன்றிணைத்து,  ஓங்கச் செய்யும் நோக்கத்துடன் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

தமிழின் தொன்மையையும் தொடர் வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் அமையும் வகையில், முதலெழுத்தான அகரம்   வளர் தமிழின் இயக்கத்தின் அடையாளமாக, சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனியிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'மரபை அரவணைத்து,  புத்தாக்கத்தையும் புதிய சிந்தனைகளையும் தமிழ் வளர்ச்சியில் ஒருங்கிணைத்து, வாழும் மொழியாகத் தொடர்ந்து வளர்ச்சியடைய வளர் தமிழ் இயக்கம் பாடுபடுகிறது. தமிழ் மொழி விழாவை கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளாகக் கொண்டு நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டுகளில் தமிழின் உயிரெழுத்துகளுக்கு ஏற்றவாறு, அழகு, ஆற்றல், இளமை என்ற வரிசையில் 'ஈடுபாடு' என்பதை கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

இவ்வாண்டின் தமிழ் மொழி விழா மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை பெற்றோர், ஆசிரியர்கள், இளைய தலைமுறையினர், அரசாங்கம், தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்போடு நடை

பெறுகிறது. முன்னர் இரண்டு வாரகால நிகழ்வாக இருந்த விழா, தற்போது ஒரு மாதம் நடைபெறவுள்ளது.

தமிழ் மொழியானது தேரைப் போன்று முன்னேறிச் செல்ல வேண்டுமெனில், அனைவரும் ஒரு திசையில் நின்று ஒருமித்தக் கருத்துடன் வடம் பிடித்து இழுக்க வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் காணொலிகள், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு இவ்வாண்டு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 'இன்றைய இளைஞர்களே நாளைய பெற்றோர்கள்' என்பதால், அவர்களிடத்தில் தமிழ் ஆர்வத்தை விதைப்பதன் மூலம் வருங்கால தலைமுறையினரையும் தமிழ் சென்றடையும்.

விழாவில் தமிழ் மொழி சார்ந்த அம்சங்கள், கலைநிகழ்ச்சிகள், கைவினைப் பயிலரங்குகள், விளையாட்டுச் சாவடிகள் உள்ளிட்ட சுவாரசியமான நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

'மின்வழித் தமிழ்மொழி' எனும் தலைப்பில் மின்னிலக்க விளையாட்டுகள் வழியாக வகுப்பறைகளில் தமிழ் கற்பிக்கப்படவுள்ளது. மாணவர்கள் தேர்வுகளுக்காக தமிழைப் படிப்பது என்பதற்கு அப்பால், ஆர்வத்தோடு தமிழைத் தேடிச் செல்ல இத்தகைய நவீனத் தொழில்நுட்ப முறைகள் அடங்கிய விழா உதவும்.

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன், சிங்கப்பூர் மண்ணுக்குரிய நாட்டுப்புறக் கதைகளை நவீனக் கோணத்தில் இளம் நாடக இயக்குநர்கள் நாடகங்களாக உருவாக்கியுள்ளனர். நாடகம் என்பது வெறும் நடிப்பு அல்ல; அது மொழி உயிர் பெறும் களம். மாணவர்கள் உணர்வுபூர்வமாகத் தமிழில் பேசவும், மொழியோடு ஆழமான 'ஈடுபாடு' கொள்ளவும் இந்த மேடை வழிவகுக்கும்.

விழாவின் முக்கிய அம்சமான பட்டிமன்றத்தில், 'நிறைவான வாழ்க்கைக்கு அவசிய தேவை செயற்கை நுண்ணறிவா? இயற்கையோடு நூலறிவா?' எனும் தலைப்பில் அனுபவமிக்க பேச்சாளர்களுடன் இணைந்து மாணவர்கள் விவாதிக்கவுள்ளனர். மாணவர்களுக்காக ஸ்டிக்கர் வடிவமைப்பு, குறும்படத் தயாரிப்பு, வில்லுப் பாட்டு போன்ற போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. 'கட்டுப்பாடும், ஈடுபாடும்'” என்ற பொருளில் மூத்தோரும், இளையோரும் தங்கள் அறிவையும், அனுபவங்களையும் பகிரவுள்ளனர்.

விழாவின்போது சிங்கப்பூரின் பிரபல தமிழ் முரசு நாளிதழ் தேர்ந்தெடுத்த மாணவர்கள், தங்களது மூத்த நிருபர்கள் மூலமாக ஊடகத்துறையில் களப் பணியாற்றுவார்கள். விழாவின் இறுதியில் அந்த மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பொது மேடையில் பகிர்ந்துகொள்வார்கள்' என்கிறார் நசீர் கனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments