இம்ரான் கானுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை: சர்வதேச சமூகம் தலையிட மகன் வேண்டுகோள்!
இம்ரான் கானுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு 1,100 நாள்கள் கடந்துள்ள நிலையில், அவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதாக அவரது மகன் காசிம் கான் சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியால சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இவர் தோஷா கானா (தேசிய கருவூலம்) வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளில் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5, 2023 அன்று கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு, வேறு பல வழங்குகளிலும் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அவரின் மகன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
என் தந்தை இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 1,100 நாள்கள் ஆகின்றன. மார்ச் மாதத்திற்குப் பிறகு நானும் என் சகோதரரும் அவரது குரலைக் கேட்கவில்லை. பல மாதங்களாக அவருடன் தொடர்புகொள்வது எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
அவருடைய கண் பார்வை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது. அவருக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பது குறித்த எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். குடும்பத்தினர், வழக்குரைஞர்கள் அவரைச் சந்திக்க அனுமதி இல்லாததால் எந்தத் தகவலும் கிடைப்பதில்லை.
பாகிஸ்தான் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர் விடுதலையாவதை விரும்புகிறார்கள்.
சர்வாதிகாரப் போக்குடைய ஓர் ஆட்சி, அரசியல் எதிர்ப்பை நசுக்குவதையும், ஜனநாயக நிறுவனங்களைச் சீர்குலைப்பதையும், தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுபவர்களை அச்சுறுத்துவதையும் தொடர்ந்து செய்து வருகிறது.
சர்வதேச சமூகம் இதைப் புறக்கணிக்க வேண்டாம் என்று நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். அநீதியைக் கண்டு மௌனம் காப்பது அந்த அநீதிக்குத் துணைபோவதற்கே வழிவகுக்கும் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இம்ரான் கானுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
கடந்த 2025 முதல் இம்ரான் கானை சந்திக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ள நிலையில், 26 வயதான காசிம் கான், அவரது சகோதரர் 29 வயதான சுலைமான் கானும் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Former prime minister Imran Khan's son has urged the international community to intervene claiming his father, who has not been incarcerated for 1,100 days, urgently needs medical attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.