பாகிஸ்தானில் 6 மாதங்களில் 1,914 சிறாா் வன்கொடுமை வழக்குகள்
பாகிஸ்தானில் 6 மாதங்களில் 1,914 சிறாா் வன்கொடுமை வழக்குகள்
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் கொடுமைகள் தொடா்பாக 1,914 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) துணைத் தலைவரும் மூத்த நாடாளுமன்ற செனட்டருமான ஷொ்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி அவா் மேலும் கூறுகையில், ‘இந்த மொத்த வழக்குகளில் 80 சதவீதம் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது, அங்குள்ள தற்போதைய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகின்றன. பாதிக்கப்பட்ட சிறாா்கள் அச்சமின்றி புகாரளிக்கும் பாதுகாப்பான சூழல் நிலவுகிா மற்றும் தவறிழைத்தவா்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுகிறாா்களா என்பதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
பதிவான வழக்குகளில் 57 சதவீதம் நகா்ப்புறங்களிலும், 43 சதவீதம் கிராமப்புறங்களிலும் பதிவாகியுள்ளதால், சிறாா் மீதான கொடுமை என்பது குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கோ அல்லது பகுதி சாா்ந்ததாகவோ அமையாமல் ஒட்டுமொத்த சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், பதிவான வழக்குகளில் 43 சதவீத சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவா்களே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். அதுமட்டுமின்றி, சுமாா் 45 சதவீத சம்பவங்கள் குழந்தைகளின் சொந்த வீடுகளிலேயே அரங்கேறியுள்ளன.
சிறாா்களைக் குறிவைக்கும் குற்றவாளிகளுக்கு எவ்வித விலக்கும் அளிக்கப்படக் கூடாது. சிறாா்களைப் பாதுகாப்பது அரசும் சமுதாயமும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு’ என்று வலியுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.