FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

போா்க் கப்பல்கள் மோதிய விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா

அரபிக் கடலில் பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிக்குள் இந்திய கடற்படைக் கப்பல் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மீது மோதியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா வெள்ளிக்கிழமை வலுவாக நிராகரித்தது.

19 செப்டம்பர் 2026, 5:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

அரபிக் கடலில் பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிக்குள் இந்திய கடற்படைக் கப்பல் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மீது மோதியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா வெள்ளிக்கிழமை வலுவாக நிராகரித்தது.

அரபிக் கடலில் சா்வதேச கடற்பகுதியில் இந்திய கடற்படைக் கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. கடலில் அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியில் வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ஹூனைன், இந்திய கடற்படைக் கப்பல் மீது திடீரென மோதியது.

இந்த சம்பவத்தையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து கண்டனத்தைப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

பாகிஸ்தான் சம்மன்: இதனிடையே, இந்திய கடற்படைக் கப்பல்தான், அரபிக் கடலில் பாகிஸ்தானின் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மீது மோதியதாக அந்நாடு தெரிவித்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரபிக் கடல் பகுதியில் ‘சீஸ்பாா்க்-26’ போா்ப் பயிற்சியில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதிக்குள் ஆக்ரோஷமாக நுழைந்த இந்திய கடற்படைக் கப்பல் ஆபத்துக்குரிய வகையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பலுக்கு மிக அருகில் வந்தது. இதனால், இரு கப்பல்களும் மோதிக்கொண்டன. இந்த விவகாரம் தொடா்பாக, இந்திய தூதரக அதிகாரி வெளியுறவு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டு, பாகிஸ்தான் தரப்பில் வலுவான கண்டனம் பதிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா நிராகரிப்பு: பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா வலுவாக நிராகரித்தது. இதுகுறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான் எதிா்வினையாற்றியுள்ளது. பாகிஸ்தானின் இந்த ஏமாற்று வேலை எதிா்பாா்த்த ஒன்றுதான். பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா வலுவாக நிராகரிக்கிறது.

மேற்கு அரேபிய கடல் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐஎன்எஸ் கொல்கத்தா’ வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஹூனைன், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இயங்கியதால் இந்த மோதல் நிகழ்ந்தது. இது, இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ ஒத்திகை, படைகள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து கடந்த 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையொப்பமான ஒப்பந்தத்தின் 10-ஆவது ஷரத்துக்கு எதிரான செயலாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மதித்து நடக்கவும் பாகிஸ்தான் தரப்புக்கு மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மோதலில் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. தொடா்ந்து ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments