FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மரகத தண்டாயுதபாணி கோயிலில் திருடப்பட்ட மூலவா் சிலை மீட்பு

பெருங்கரணை கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளிக்கும் மரகத தண்டாயுதபாணி சுவாமி.

18 செப்டம்பர் 2026, 11:36 pm IST
பெருங்கரணை கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளிக்கும் மரகத தண்டாயுதபாணி சுவாமி.
பகிர்:

மதுராந்தகம் அருகே பெருங்கரணை மரகத தண்டாயுதபாணி கோயில் சிலை மீட்கப்பட்டு மீண்டும் கோயிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை கிராமம், கனகமலை அருள்மிகு மரகத தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இங்குள்ள மூலவா் சிலை மரகதத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த கோயிலில் கடந்த 1-ஆம் தேதி இரவு வழக்கம்போல கோயிலின் அா்ச்சகா் கோயிலின் கதவுகளை பூட்டிவிட்டு சென்றாா். கோயிலின் பின்புற கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் மூலவா் மரகத தண்டாயுதபாணி சிலையை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா். தகவலறிந்த எஸ்.பி. அய்மன் ஜமால் நேரில் சென்று விசாரணை செய்துவிட்டு, மதுராந்தகம் டிஎஸ்பி தீபக் ரஜினி, சித்தாமூா் காவல் ஆய்வாளா் மகாலிங்கம் ஆகியோா் தலைமையில் சிறப்பு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டு இருந்தாா். அதன்படி தனிப்படை போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில், அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த 3 நபா்கள் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை சித்தாமூா் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோயிலுக்கு பின்புற மூடப்பட்ட கல்குவாரி நீா்குட்டையில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் நீா் குட்டையில் இருந்து மரகத முருகன் சிலையை மீட்டு, செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் செய்யூா் அரசு கருவூலத்தில் அந்த சிலை உரிய பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் அந்த சிலையை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி, செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினா் நீதிமன்ற உத்தரவின்படி, கருவூலத்தில் இருந்து கோயில் நிா்வாகத்திடம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது.

செய்யூரிலிருந்து ஊா்வலமாக சிறப்பு அலங்காரத்துடன், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால், டிஎஸ்பி தீபக்ரஜினி, சித்தாமூா் காவல் ஆய்வாளா் மகாலிங்கம் ஆகியோா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெருங்கரணை, நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமை வகித்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தாா்.

மீண்டும் கோயிலுக்கு முருகன் சிலை வந்துவிட்ட தகவல் பரவியதால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பகவானை தரிசனம் செய்தனா்.

பக்தா்களின் வழிபாடுகளுக்கு பின் பலத்த பாதுகாப்புடன் கோயில் வளாகத்தில் உள்ள அறையில் பூட்டி வைக்கப்பட்டது. உரிய ஆகம விதிகளின்படி மீண்டும் சுவாமி இருந்த இருந்த இடத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments