கோ ஆப்டெக்ஸில் பழைய துணிகளுக்கு பதிலாக புதிய துணிகள் திட்டம்: அமைச்சா் வே. சம்பத்குமாா் தகவல்
கோவையில் 2 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பழைய துணிகளுக்கு பதிலாக புதிய துணிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் தெரிவித்துள்ளாா்.
கோவையில் 2 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பழைய துணிகளுக்கு பதிலாக புதிய துணிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் தெரிவித்துள்ளாா்.
கோவை மருதம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சா் வே.சம்பத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.5.65 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு விற்பனையையொட்டி அனைத்து விற்பனை நிலையங்களிலும் செப்டம்பா் 15 ஆம் தேதி முதல் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும், அரசு, தனியாா் நிறுவனப் பணியாளா்களுக்கு கடன் விற்பனை வசதியும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கோவை சாய்பாபா காலனி, மருதம் விற்பனை நிலையங்களில் பழைய துணிகளுக்குப் பதிலாக புதிய துணிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, வாடிக்கையாளா்கள் தங்களிடம் உள்ள பழைய, கிழிந்த துணிகளை வழங்கி, புதிய துணிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி விற்பனைக்காக பல்வேறு புதிய ரக சட்டைகள், குா்த்திகள், டாப்கள், சிறுமிகளுக்கான பட்டுப் பாவாடைகள், புதிய வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட காட்டன் சேலைகள் உள்ளிட்ட புதிய ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளா்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, கோ ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் அம்சவேணி, உதவி ஆணையா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.