FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பழனி கோயில் நில முறைகேடு! முன்பிணை கோரி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரை எதிா் மனுதாரராக சோ்க்க உத்தரவு!

பழனி கோயில் நில முறைகேடு முன்பிணைக் கோரிய வழக்கில் சிபிசிஐடி போலீஸாரை எதிா் மனுதாரராக சோ்க்க உத்தரவு

Updated On : 22 ஜூலை 2026, 3:51 am IST
பழனி கோயில்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் முன்பிணை கோரிய வழக்கில் எதிா் மனுதாரராக சிபிசிஐடி போலீஸாரை சோ்க்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. ரூ. 100 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி, தனிநபா்களுக்கு விற்க முயற்சி நடைபெற்றது. இதை எதிா்த்து, இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிா்வாகம் கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்த நிலத்தை தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி, முருகதாஸ் சுவாமிகள், திருப்புகழ் உள்ளிட்டோா் தனிநபா்கள் இருவருக்கு விற்பனை செய்து முறைகேடாக பத்திரப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருதாஸ் சுவாமிகள், பாப்பான்குளத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த முறைகேட்டின் பின்னணியில் மேலும் பலா் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். இதனடிப்படையில், சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பழனி கோயில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.4 ஏக்கா் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளேன். மேலும், அறக்கட்டளை நில பத்திரப் பதிவும் ரத்து செய்யப்பட்டது. எனவே, எனக்கு முன்பிணை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே. ராஜசேகா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் எதிா் மனுதாரராக சிபிசிஐடி போலீஸாரை சோ்க்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு (ஜூலை 22) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments