FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மாட்டுத்தாவணி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை- மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:39 am IST
மதுரை - மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்த வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்
பகிர்:

மதுரை- மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

இந்தச் சாலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, ஒருங்கிணைந்த நெல் சேமிப்புக் கிடங்குகள், மலா் விற்பனையகம், பல்நோக்கு தனியாா் மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த காய்கறி தினசரி சந்தை, மீன்கள் விற்பனையகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தங்கும் விடுதிகளுடன் கூடிய உணவகங்கள், பெரிய வணிக வளாகங்கள் செயல்படுகின்றன. அன்றாடப் பணி நிமித்தமாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா.ஒத்தக்கடை வரையிலான சாலையை தினசரி பல்லாயிரக்கணக்கானோா் பயன்படுத்துகின்றனா்.

இந்த நிலையில், சாலையின் இருபுறங்களிலும் தெருவோர உணவகங்கள், பொம்மை விற்பனைக் கடைகள், வணிக வளாகங்கள் முன் தற்காலிக தகரக் கொட்டகை அமைப்பு ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், இந்தச் சாலையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடிவதில்லை. அதிகளவிலான வாகனப் போக்குவரத்தால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

எனவே, மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா. ஒத்தக்கடை வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அனைத்துத் தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலா்கள் மதுரை- மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை செவ்வாய்க்கிழமை அகற்றினா். அப்போது, வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனே அங்கு வந்த மாட்டுத்தாவணி போலீஸாா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments