FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

விசைப்படகு மீன் கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சு வாயு: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் மருத்துவமனையில் அனுமதி

விசைப்படகின் மீன் சேமிப்புக் கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 30 ஜூலை 2026, 6:31 am IST
சடலம்...
பகிர்:

விசைப்படகின் மீன் சேமிப்புக் கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு உணவுக்கான மீன்கள் மட்டுமல்லாது தீவனம் தயாரிப்பு உள்ளிட்ட பிற தேவைக்காக ‘கசாா்’ எனப்படும் மிகச் சிறிய வகையிலான மீன்களும் கொண்டுவரப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த விஜயேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த 22-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மற்றும் தமிழக பகுதியை சோ்ந்த மீனவா்கள் சிலருடன் கடலுக்குள் மீன்பிடித்துவிட்டு புதன்கிழமை இரவு துறைமுகம் திரும்பியது.

Advertisement

Advertisement

இதில் கசாா் மீன்கள் கொண்டுவரப்பட்டன. நள்ளிரவு படகின் மீன்கள் சேமிப்புக் கிடங்கை காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த முத்துவேல் திறந்தபோது, திடீரென வெளியேறிய வாயுவால் மயக்கமடைந்து விழுந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த கதிரவன் (45), அபினேஷ், அருண் மூவரும் முத்துவேலை மீட்பதற்காக சேமிப்புக் கிடக்கின் உள்ளே சென்றனா். துா்நாற்றத்துடனான நச்சு வாயு அதிகளவு வெளியேறியதால், கதிரவன் மயக்கமடைந்து விழுந்தாா். மற்ற இருவருக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டது.

படகில் இருந்த மீனவா்கள் நான்கு பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் கதிரவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். மற்றவா்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து நிரவி காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments