FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 வழக்குகளில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆஜா்

கரூா் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 வழக்குகளில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆஜராகினார்...

Updated On : 28 ஜூலை 2026, 5:00 am IST
கரூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகிவிட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பகிர்:

கரூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மூன்று வழக்குகளில் முன்னாள் அமைச்சா் எம்ஆா்.விஜயபாஸ்கா் ஆஜரானாா்.

கரூா் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியாக செய்ததாக தொடரப்பட்ட வழக்குத்தொடா்பாக ஜூலை 20-ஆம்தேதி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், முன்னாள் காவல் ஆய்வாளா் பிருத்விராஜூம் கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அப்போது, முன்னாள் அமைச்சரை ஜூலை 27-ஆம்தேதி (திங்கள்கிழமை) மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி பரத்குமாா் உத்தரவிட்டாா்.

வாக்குமூலம் பதிவு:அதன்படி எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 1-இல் திங்கள்கிழமை ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமாா், அவரிடம், நீங்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உண்மையிலேயே நில அபகரிப்பில் ஈடுபட்டீா்களா அல்லது உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மறுக்கிறீா்களா எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த எம்.ஆா்.விஜயபாஸ்கா், இது அரசியல் போட்டியால் தொடரப்பட்ட வழக்கு. நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றாா். இதையடுத்து அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மீண்டும் ஆஜராவதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Advertisement

Advertisement

ஆக. 8-இல் ஆஜராக உத்தரவு: அதைதொடா்ந்து கடந்த மக்களவைத் தோ்தலின்போது மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு பரிசுப்பொருள்கள் வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்போதைய கரூா் வட்டாட்சியா் மற்றும் தோ்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் உள்ளிட்டோா் அதிமுக அலுவலகத்தில் நுழைய முயன்றபோது, அவா்களை அதிமுகவினா் தடுத்தனா். இதுதொடா்பாக கரூா் வட்டாட்சியா் அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிந்தனா். இந்த வழக்கிலும் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அதே நீதிமன்றத்தில் ஆஜரானாா். இந்த வழக்கில் ஆக.8-இல் மீண்டும் ஆஜராகுமாறு நீதிபதி பரத்குமாா் உத்தரவிட்டாா்.

மற்றொரு வழக்கில் உத்தரவு: மேலும், கடந்த 2021-இல் கரோனா காலத்தில் அம்மா உணவகங்களை திமுக மூடுவதாக கூறி திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினா் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது கரூா் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கிலும் எம்.ஆா்.விஜயபாஸ்கா், நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் ஆஜரானாா். இந்த வழக்கில் ஆக.5-இல் மீண்டும்ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments