FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியில் 10 நிமிடங்களில் 2 துப்பாக்கிச்சூடு: ஒருவா் பலி

10 நிமிடங்களுக்குள் மூன்று போ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சம்பவங்களில் ஒருவா் கொல்லப்பட்டாா்.

Updated On : 10 நவம்பர் 2024, 2:00 am IST
கோப்புப்படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் தனித்தனி பகுதிகளில் 10 நிமிடங்களுக்குள் மூன்று போ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சம்பவங்களில் ஒருவா் கொல்லப்பட்டாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணயைா் ராகேஷ் பவேரியா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் முதலில் நள்ளிரவு 1 மணியளவில் வெல்கம் பகுதியில் கபீா் நகரில் ஒரு நபா் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவரது ஸ்கூட்டியை கொள்ளையடித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அருகில் உள்ள ஜோதி நகரில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா்.

முதல் சம்பவத்தில் நதீம் (எ) பாபி மற்றும் ஷாநவாஸ் ஆகியோா் குண்டுக் காயமடைந்தனா். இரண்டாவது சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு நதீம் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஷாநவாஸ் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். கபீா் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதலில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. அங்கு சென்ற போலீஸாா் ​ மூன்று காலி தோட்டாக்கள் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் சாலையோரத்தில் கிடப்பதைக் கண்டனா்.

இதுபற்றி போலீஸாா் விசாரித்த போது, ​ ​அந்த மோட்டாா்சைக்கிள் குற்றவாளிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அந்த நபா் அதை அங்கேயே விட்டுவிட்டு, பலியானவா்களில் ஒருவரின் ஸ்கூட்டியுடன் தப்பியோடிவிட்டாா்.

இதற்கிடையில், அருகில் உள்ள ஜோதி நகா் பகுதியில் இருந்து அதிகாலை 1.26 மணிக்கு ஸ்கூட்டியில் வந்த மூன்று போ் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மற்றொரு பிசிஆா் அழைப்பு வந்தது. அழைப்பாளா் ராகுல் என அடையாளம் காணப்பட்டாா்.

அவா் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவா் ஸ்கூட்டியில் வந்து தனது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறினாா். அந்த இடத்தில் இருந்து 6 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவா்கள் பின்னா் அதே பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு நதீமுடன் ரூ.10,000 பணத் தகராறு இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவா்கள் அவரை குறிவைக்க விரும்பினா். ஆனால், ஷாநவாஸும் அருகில் நின்றிருந்ததால் அவரது காலிலும் குண்டுக் காயம் ஏற்பட்டது. இரு இடங்களிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சரியான காரணத்தை அறிய, குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக வெல்கம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதி நகரிலும் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments