FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அன்பு, பணிவு, மரியாதை... இந்திய அரசியலில் இல்லை: ராகுல் காந்தி பேச்சு!

அன்பு, பணிவு, மரியாதை போன்றவை இந்திய அரசியலில் இல்லை என்று ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியுள்ளார்.

Updated On : 9 செப்டம்பர் 2024, 10:53 am IST
ராகுல் காந்தி
பகிர்:

அன்பு, பணிவு, மரியாதை போன்றவை இந்திய அரசியலில் இல்லை என்று ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாழும் புலம்பெயர்ந்த இந்திய மக்களிடையே இன்று பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் இந்தியாவை ஒரு எண்ணமாக மட்டும் நம்புகிறது. ஆனால், இந்தியா என்பது எண்ணங்களின் பன்முகத்தன்மை என்று நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்காவைப் போலவே அனைவரும் எல்லாவற்றிலும் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அனைவரும் கனவு காண்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும், சாதி, மத, மொழி, இன, வரலாற்றுப் பாகுபாடின்றி அனைவருக்குமான இடம் இங்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Advertisement

Advertisement

இது ஒரு சண்டை. இந்தியப் பிரதமர் அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கிப் பேசுகின்றார் என இந்திய மக்கள் புரிந்துகொண்டபோது தேர்தலில் இந்தச் சண்டை வலுப்பெற்றது. ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால் மாநிலங்களின் ஒன்றியம் என்பது மொழி, மதம், பண்பாடு, சாதி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்பதே. இவை அனைத்தும் அரசியலமைப்பில் உள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்திய அரசியலில் கட்சிகளிடையே அன்பு, மரியாதை மற்றும் பணிவு என்பது இல்லை. ஒரு சமூகம், ஒரு சாதி, ஒரு மதம், ஒரு மாநிலம், ஒரு இனம் என பாகுபாடு காட்டாமல் அனைத்து மனிதரையும் நேசியுங்கள்.

சக்திவாய்ந்த, அதிகாரம் படைத்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் அனைவருக்கும் மரியாதை செய்யுங்கள்” என்றார் ராகுல் காந்தி.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், “பாஜக நமது பாரம்பரியம், மொழி போன்றவற்றைத் தாக்குவதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் புரிந்து வைத்திருப்பது என்னவென்றால், நமது அரசியலமைப்பைத் தாக்குபவர்கள் மதப் பாரம்பரியத்தையும் தாக்குகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே பாஜக மற்றும் பிரதமருக்கு இந்தியாவில் யாரும் பயப்படவில்லை என்பதை நாம் கண்டோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கும் எவரையும் ஏற்கப் போவதில்லை என்று காட்டிய ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட இந்திய மக்களின் பெரிய வெற்றி இது. எங்கள் மாநிலம் மற்றும் மதத்தைத் தாக்குபவர்களை நாங்கள் ஏற்கப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, ”என் பார்வையில், நீங்கள் அமெரிக்க மற்றும் இந்தியா என்ற இரு வீடுகளுக்கு இடையே சுதந்திரமாகப் பயணிக்க வேண்டும். இந்தியாவின் சிந்தனைகளை அமெரிக்காவிற்கும், அமெரிக்காவின் சிந்தனைகளை இந்தியாவிற்கும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியா, அமெரிக்காவின் உறவுக்கான முக்கிய பங்கு உங்களிடம் உள்ளது. ஏனெனில் இது இரு நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்று கூறினார்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments