எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?
5 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோடி சீனா செல்வதாகத் தகவல்...
2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி முதல் செப்.1 ஆம் தேதி வரை ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களுடன், உச்சி மாநாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த, பிரதமர் மோடி ஜப்பானுக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
அதையடுத்து, பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாநாடு வரும் ஆக.31 முதல் செப்.1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரதமர் மோடியின் இந்தப் பயணங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அவரது சீன பயணம் உறுதி செய்யப்பட்டால், கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீனா இடையில் நடைபெற்ற எல்லைப் பிரச்னைகளுக்குப் பிறகு, 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்லும் முதல் பயணமாக இது இருக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!