விவாதத்துக்கு நேரம் குறித்த அமித் ஷா! யார் ஓடுகிறார்கள் என்று பார்க்கலாம் என சவால்!
நாடாளுமன்றத்தில் நீட் போராட்டம் தொடர்பான விவாதத்துக்கு வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்...
தில்லி மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவாதத்துக்கு இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை தயாராக இருப்பதாக எதிர்க்கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் அமித் ஷா பதிலளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
Advertisement
Advertisement
ஆனால், மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா்?, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்புக் கோர வேண்டும், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் ஆகிய மூன்று நிபந்தனைகளை முன்வைத்து தொடர்ந்து விவாதத்துக்கு காங்கிரஸ் மறுத்து வருகின்றது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா பேசியதாவது:
”நாடாளுமன்றத்தில் ‘தப்பி ஓடிவிட்டார்’, ‘காணாமல் போய்விட்டார்’ உள்ளிட்டவை அதிகம் கேட்கப்படும் வார்த்தைகளாக உள்ளன. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து நான் நாடாளுமன்றத்துக்குத் தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். நான் என் அறையில்தான் அமர்ந்திருக்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் செயல்பட அனுமதிப்பதில்லை.
நீட் போராட்டங்கள் குறித்து முழுமையான விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். அதற்கான நேரத்தை தெரிவிக்கவும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுள்ளோம்.
முதலில் விவாதம் மட்டுமே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். நாடாளுமன்றத்தில் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், விவாதம் நடைபெறுவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.
இப்போது, யார் தப்பி ஓடுகிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் விவாதத்துக்கான நேரத்தை குறிப்பிட்டு அவைத் தலைவரிடம் அவர்கள் கடிதம் அளிக்கப்பட்டும். இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் அவையில் அமர்ந்திருப்பேன். நான் அனைவரின் கருத்துக்களையும் கேட்பேன். ஒவ்வொரு கருத்துக்கும் பதிலளிப்பேன்.
அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதைப் பற்றியும் விவாதிக்க தயாராக இருக்கிறது. நாடாளுமன்றத்தை அவர்கள் செயல்பட அனுமதித்தால் மட்டும் போதும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Ready for discussion! Amit Shah Challenges to see who runs!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.