ஐஃபோனுக்காக தாத்தாவைக் கொன்ற 13 வயது சிறுமி! 3 நண்பர்களுடன் கைது
ஐஃபோன் வாங்க தாத்தாவைக் கொன்ற 13 வயது சிறுமி தன்னுடைய 3 நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கருவட்டா பகுதியைச் சர்ந்த 65 வயது தாத்தாவைக் கொலை செய்த வழக்கில், அவரது 13 வயது பேத்தி மற்றும் பேத்தியின் மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவன்குட்டி செட்டியார் என்ற 65 வயது நபர், இரண்டு நாள்களாகப் பூட்டிக்கிடந்த தனது வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலைச் சம்பவத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் அவரது பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை திட்டமிட்ட பேத்தி, தன்னுடைய 3 நண்பர்களுடன் சேர்ந்து அதைச் செயல்படுத்தியதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியைச் சேர்ந்த நெடுங்கோளத்தைச் சேர்ந்த சிவன்குட்டி, மனைவி மற்றும் தனது பேத்தியுடன் அந்த வாடகை வீட்டில் வசித்து வந்தார். சனிக்கிழமை மாலை அக்கம் பக்கத்தினர் அவரை வீட்டின் வெளியே கடைசியாகப் பார்த்துள்ளனர். அன்று இரவு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
Advertisement
Advertisement
வீட்டிலிருந்து கயிறுபோன்ற பொருள்களைக் கொண்டு அவரது கைகளும் கால்களும் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. அருகில் மிளகாய்த்தூள் சிதறிக் கிடந்ததுடன், படுக்கையறை அலமாரியும் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தங்க நகைகளும் பணமும் காணாமல் போயிருந்தன.
முதற்கட்டமாக, திட்டமிடப்பட்ட கொலை, கொள்ளையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. ஆனால், குடும்பத்தினருக்குள் நடந்த பேச்சுகள், தொலைபேசி அழைப்புகள் போன்றவை விசாரணையில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்டவரின் 13 வயது பேத்திதான், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பதும், வீட்டிலிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை விற்று, அந்த சிறுமி தனக்கு ஓர் ஐபோனும் (iPhone) நண்பர்களுக்கு மோட்டார் சைக்கிள்களும் வாங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக அந்த சிறுமி, அடிக்கடி செல்போன் பயன்படுத்துவது மற்றும் வீட்டிற்கு இரவில் தாமதமாக வருவது குறித்துச் சிவன்குட்டி தொடர்ந்து கண்டித்ததால், அவர் மீது அந்தச் சிறுமிக்குக் கோபம் இருந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொல்லத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுமிக்கு இந்த சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்களுடன் சேர்ந்த சிறுமி கொலையை திட்டமிட்டு செய்திருக்கிறார். கொலை செய்வது குறித்து இவர்கள் செல்போனில் பல விடியோக்களைப் பார்த்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
சிவன்குட்டியின் மனைவி, தன்னுடைய மகளின் பிரசவத்துக்காக மருத்துவமனையில் இருந்த நிலையில், இந்த கொலை நடந்திருக்கிறது. வாடகை வீட்டுக்கு அருகே, மகள்களின் வீடுகளும் கட்டப்பட்டு வந்துள்ளது. ஒரு மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
13-year-old girl kills grandfather for an iPhone! Arrested along with 3 friends
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.