மீண்டும் சந்திக்கும் மோடி - புதின்! 11 நாள்களில் 2-வது முறை!
பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சந்திப்பு பற்றி...
பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வருகின்ற வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இந்தியா தலைமை தாங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகின்ற செப். 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அந்நாட்டின் பங்கேற்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷியாவின் தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“இரு நாள்களில் அதிபர் புதின் இந்தியப் பயணத்தை தொடங்கவுள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன், பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கும் இது ஒரு முக்கியமான தருணமாக அமையும்.
இந்தப் பயணத்தின்போது அதிபர் புதினும் பிரதமர் மோடியும் மீண்டும் இருதரப்புச் சந்திப்பை மேற்கொள்வதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இந்தச் சந்திப்பு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெறவுள்ளது.
இதில் இருநாட்டு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள். அத்துடன், உக்ரைன் போர் தொடர்பான நிலவரம் குறித்துத் தனது இந்திய நண்பரான மோடியிடம் அதிபர் புதின் எடுத்துரைப்பார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோருடன் தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
கடந்த 11 நாள்களில் பிரதமர் மோடியும் அதிபர் புதினும் இரண்டாவது முறையாக சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவிருப்பது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
PM Modi and Prez Putin to meet again - For the second time in 11 days
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.