இந்தியாவின் தேர்தல் நடைமுறை உலகின் மிக வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்
இந்தியாவின் தேர்தல் நடைமுறை உலகின் மிக வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருப்பது...
அகமதாபாத்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதல் வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு நிலையிலும் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், இந்தியாவின் தேர்தல் நடைமுறை உலகின் மிக வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.
குஜராத் பல்கலைக்கழகத்தின் அடல் கலாம் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுடனான கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார்.
அப்போது, வாக்காளர்கள் பட்டியல் தயாரிப்பது முதல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை வரை தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் தொடர்ந்து சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். எனவே, இந்தியாவின் தேர்தல் நடைமுறை உலகின் மிக வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளில் ஒன்றாக உள்ளது என்று கூறினார்.
Advertisement
Advertisement
அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கேற்புடன் வாக்காளர் பட்டியல்கள் தொடர்ந்து சரிபார்க்கப்படுகின்றன.
மேலும், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வதோடு, பட்டியலில் உள்ள வாக்காளர்கள் வசிப்பிடத்தில் இல்லாதவர்கள், வேறு இடத்திற்கு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டைப் பதிவு மற்றும் வெளிநாட்டவர் போன்ற வகையினரை கண்டறிவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பொறுப்பாகும் என்றார்.
வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்குவதற்கும், தகுதியான 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அரசிய கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் வேண்டும் என்று அவர் கூறினார்.
தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்யும் அதே வேளையில், வாக்குப்பதிவு செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை விளக்கிய அவர், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, வேட்பாளர்களின் வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்புக் கருவிகளும் சரிபார்க்கப்படுகின்றன.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முடிவுகள் தொடர்பான நடைமுறைகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நிறைவு செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களில் கையெழுத்திடப்படுகின்றன.
அதேபோல், வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளர்களின் வாக்கு எண்ணும் முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள், படிவம் 17சி-இல் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குகளுடன் சரிபார்க்கப்படுகின்றன.
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்கப்பதற்காக, தேர்தல் ஆணையம் அவ்வப்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (சிறப்பு தீவிர திருத்தப் பணி) மேற்கொள்கிறது.
தேர்தல் நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, தேவையான விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களுடன் நேரடியாக கேட்டறிகின்றனர். மேலும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல், வரைபடமாக்குதல் மற்றும் கருத்துகேட்புக் கூட்டங்கள் போன்ற செயல்முறைகள் மூலம் வாக்காளர் பட்டியலை மேலும் துல்லியமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
துல்லியமான வாக்காளர் பட்டியலை பராமரிப்பதில் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுமாறு தேர்தல் நிலை அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் பகுதிக்குரிய வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்குமாறும், 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான நடைமுறைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இது நாட்டின் ஜனநாயகத்திற்கான மாபெரும் சேவைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
உலகின் 35 முக்கிய ஜனநாயக நாடுகளை உள்ளடக்கிய அமைப்பான 'சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவன'த்தின் தலைமைப் பதவியை இந்தியா தற்போது வகித்து வருகிறது. இது இந்தியாவின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறைக்குக் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கிறது என்று குமார் கூறினார்.
18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு குடிமகனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்களிப்பதன் மூலம் மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Chief Election Commissioner (CEC) Gyanesh Kumar has said India's electoral process is among the most transparent in the world as verification is carried out at every stage, from electoral rolls to counting of votes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.