இரு தரப்புக்கும் பயனளிக்கும் உத்தியை முன்னெடுக்க மோடி-பெஷஸ்கியான் முடிவு
இந்தியா-ஈரான் இடையிலான நட்பு குறித்தும், நீண்டகால கண்ணோட்டத்துடன் இந்த உறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து...
புது தில்லி: மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா-ஈரான் இடையிலான நட்பு குறித்தும், நீண்டகால கண்ணோட்டத்துடன் இந்த உறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேற்காசிய பதற்றம் மற்றும் அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கைளுக்கு மத்தியில், பிராந்திய ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் ஆகியோர் புது தில்லியில் ஆலோசனை நடத்தினர். அப்போது, தங்கள் இருதரப்பு உறவில் நீண்டகால மற்றும் 'இரு தரப்புக்கும் பயனளிக்கும்' உத்தியை முன்னெடுக்க இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்காக தில்லி வந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே இரண்டு வாரங்களுக்குள் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பாகும். முன்னதாக, ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின்போதும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.
Advertisement
Advertisement
"பிஷ்கெக் முதல் தில்லி வரை, பயனுள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன," என்று சந்திப்புக்குப் பிறகு மோடி கூறினார்.
இந்தியா-ஈரான் நட்பு குறித்தும், நீண்டகால கண்ணோட்டத்துடன் இந்த உறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்ததாக மோடி தெரிவித்தார்.
"நாங்கள் இந்தியா-ஈரான் நட்பு குறித்துப் பேசினோம். நீண்டகால மற்றும் இரு தரப்புக்கும் பயனளிக்கும் உத்தியுடன் நாங்கள் முன்னேற வேண்டும் என்று நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் சூழலும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெற்றது. "பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நீடித்த அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டில் தொடர்கிறது," என்று மோடி கூறினார்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் "பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம்" மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், கடல்சார் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரம், மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றை உறுதி செய்வதோடு, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டத் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தில் தேசிய நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பெசஷ்கியன் அழைப்பு விடுத்தார்.
உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தில் தேசிய நாணயங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதே மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று கூறிய அவர், இந்த நடவடிக்கையானது நாணய அபாயங்களை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பரஸ்பர தீர்வுகளை செயல்படுத்துவதோடு இணைந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தற்போதுள்ள உலகளாவிய நிதி அமைப்பு, ஒரு சில நாணயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதால், அரசியல் அதிர்ச்சிகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்று தெரிவித்த பெசஷ்கியன், பிரத்யேக கடன் வசதிகள், உள்ளூர் நாணய நிதி மற்றும் தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கான உத்தரவாதக் கருவிகள் மூலம், உறுப்பு நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு முக்கிய இயந்திரமாக புதிய மேம்பாட்டு வங்கி மாற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
செய்யறிவு உலகப் பொருளாதாரத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதால், டிஜிட்டல் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் பிரிக்ஸ் ஒரு பெரிய பங்கை வகிக்க வேண்டும். இந்த அமைப்பு, வெறும் தொழில்நுட்ப நுகர்வோராக மட்டும் இல்லாமல், அறிவுசார் உற்பத்தி, டிஜிட்டல் தரநிலைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளின் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
India and Iran have agreed to pursue a long-term, “win-win” approach to their bilateral relationship, as Prime Minister Narendra Modi and Iranian President Masoud Pezeshkian held talks in New Delhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.