பாகிஸ்தானின் ஷாசாத் பாட்டி நெட்வொர்க்கை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த மத்திய அரசு!
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'ஷாசாத் பாட்டி நெட்வொர்க்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
எல்லை தாண்டிய கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'ஷாசாத் பாட்டி நெட்வொர்க்' (SBN) அமைப்பை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது ஏன்?
Advertisement
Advertisement
’ஷாசாத் பாட்டி நெட்வொர்க்’ இந்தியாவின் எல்லைகள் வழியே ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவதிலும், இளைஞர்கள் மற்றும் சிறு குற்றவாளிகளை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வைப்பதாகவும் தெரிவித்துள்ள அமித் ஷா, இந்திய ஜனநாயகத்தையும் மத நல்லிணக்கத்தையும் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த அமைப்பினர் நாடு முழுவதும் பல சட்டவிரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மீது பயங்கரவாதம், வெடிபொருட்கள், ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம், அரசு ரகசியங்கள், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான சட்டங்கள் உள்பட பல்வேறு சட்டங்களின் பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாசாத் பாட்டி நெட்வொர்க்
கேங்ஸ்டராக இருந்து பயங்கரவாதியாக மாறிய 'ஷாசாத் பாட்டி’ என்பவரின் தலைமையில் இந்த அமைப்பு இயங்கி வருகின்றது. அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றும் ஷாசாத் வேறு நாட்டில் இருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற இந்த அமைப்பிடமிருந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்திய பாதுகாப்பு முகமைகளின் நாடு தழுவிய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துள்ளனர். இந்த அமைப்பினரின் திட்டங்களை முறியடித்து, கடந்த மாதம் மட்டும் 200 பேர் வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்திருந்தார்.
ஷாசாத் பாட்டி நெட்வொர்க் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதால் உபா சட்டத்தின் கீழ் அந்த அமைப்பின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும், அதன் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஒரு சட்டப்பூர்வமான கட்டமைப்பை வழங்குகிறது.
Central Government declares Pakistan's Shahzad Bhatti network a terrorist organization!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.