மே.வங்கத்தில் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசியதாகக் குற்றச்சாட்டு...
மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா இன்று (செப். 16) நதியா மாவட்டத்தின் தெஹட்டா பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ளார்.
அப்போது, மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய பாஜகவினரின் போராட்டத்தில் காவல் துறையினர் முன்னிலையில் அவர் மீது முட்டைகளை வீசப்பட்டுள்ளது. இதையடுத்து, தன் வாகனத்தின் மீது முட்டை வீசப்படும் விடியோக்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மஹுவா மொய்த்ரா பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“நீதிபதி திபங்கர் தத்தாவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கூட்டத்திற்காக நான் எனது தொகுதிக்குச் சென்றிருந்தேன். இதுகுறித்து மேற்கு வங்கக் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும் பாஜகவினர் அவர்களின் உதவியுடன் என் மீது முட்டைகளை வீசினர். உங்களின் அறிவுரைப்படியே ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொண்டதைப் போல நானும் அவர்களை எதிர்கொண்டுள்ளேன்.
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 4 போலீஸ் அதிகாரிகள் என்னுடன் இருந்தனர். தாக்குதலின்போது மேலும் அதிகமான காவலர்களும் வந்தனர். ஆனால், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக என்னை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினார்கள். இதுதான் மேற்கு வங்கத்தில் நடைபெறுகிறது”
முன்னதாக, முகப்புத்தகப் பதிவுக்கு எதிரான வழக்கில் காவல் துறையினர் முன்பு நேரில் ஆஜராக வேண்டுமெனும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணைக்கு ஆஜராகையில் தன் மீது முட்டைகள் வீசப்படக் கூடும் எனக் கூறி மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த அந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் துப்பாக்கிக் குண்டுகளை தங்கள் நெஞ்சில் தாங்கிக் கொண்டனர். நீங்கள் ஒரு எம்பி, உங்களுக்கு முட்டைகளைக் கண்டால் பயமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
It has been alleged that BJP members threw eggs at Trinamool Congress Lok Sabha MP Mahua Moitra in West Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.