FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘கண்ணீர் சிந்தும் பாம்பு’ இந்திய உயிரியல் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

சர்வதேச அளவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாம்பினங்கள் மொத்தம் 3,709. அவற்றில் சுமார் 110 இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களைச் சார்ந்தவை. வடகிழக்கிலும் மிகுதியான பாம்புகள் இருக்கும் மாநிலம் என்றால் அது 

Updated On : 13 பிப்ரவரி 2019, 11:19 am IST
பகிர்:

அருணாச்சலப் பிரதேசத்தில் லெபா ரசா மாவட்டத்தில் புதிய வகை அழும் பாம்பு இனம் ஒன்றை அங்குள்ள உயிரியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பாம்பு இனத்திற்கு உயிரியல் வல்லுனர்கள் தேர்வு செய்திருக்கும் பெயர்  ‘ஹேபியஸ் லாக்ரிமா’ இந்தப் பாம்பைப் பற்றிய தகவல் நியூஸிலாந்தில் இருந்து வெளியாகும் விலங்கியல் வகைப்பாட்டைப் பற்றியதான மெகா அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

லாக்ரிமா எனும் வார்த்தைக்கு கண்ணீர் என்று பொருள். அதற்காக இந்தப் பாம்பு வாய் விட்டு அழும் என்று நினைத்து விடத் தேவையில்லை. பாம்பின் கண்ணுக்கு அடியில் இருக்கக் கூடிய கருத்த பகுதி ஒரு பெரிய கண்ணீர்த்துளி போல தோற்றமளித்ததால் உயிரியல் வல்லுனர்கள் அதை நினைவுறுத்தும் பொருட்டு இந்தப் பாம்புக்கு அழும் பாம்பு என்று பெயரிட்டு விட்டார்கள்.

Advertisement

Advertisement

லத்தீன் மொழியில் லாக்ரிமா என்றால் கண்ணீர் என்று பொருள். இந்த வகைப் பாம்பை முதன்முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் பசார் பகுதியில் கண்டறிந்தவர் ஜயாதித்ய புர்கயஸ்தா எனும் உயிரியல் வல்லுனரே! இவர் முதன்முறை இந்தப் பாம்பை பசார் பகுதி மலையடிவாரங்களில் அமைந்திருக்கும் நெல் வயல்களில் இருந்து கண்டறிந்திருக்கிறார். அங்கே இவ்வகைப் பாம்புகள் அனேகமிருந்தனவாம். நன்கு வளர்ந்த பாம்புகள் 48.3 செமீ நீளமானவை. பெரும்பாலும் மலையடிவாரத்தை ஒட்டிய வயல்வெளிகளின் அருகில் ஓடும் நீர்நிலைகளில் வசிக்கக்கூடிய அழும் பாம்பு வகைகள் ஆறு அல்லது குளத்தில் இருக்கும் சிறு மீன்கள், தலைப்பிரட்டைகள், தவளைகளை உண்டு உயிர்வாழ்கின்றன. பொதுவாக இவ்வகைப் பாம்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை அல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாம்பினங்கள் மொத்தம் 3,709. அவற்றில் சுமார் 110 இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களைச் சார்ந்தவை. வடகிழக்கிலும் மிகுதியான பாம்புகள் இருக்கும் மாநிலம் என்றால் அது அருணாச்சலப் பிரதேசமே. அங்கு மட்டும் சுமார் 55 வகைப் பாம்பினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை பறவைகள், மீன்கள், விலங்குகள் மற்றும் பாம்புகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments