முகப்பு
செய்திகள்

பெண்கள் அதிகம் மது அருந்துவதற்கு காரணம் என்ன?

உடல்நலப் பிரச்னைகளைத் தாண்டி மனநலப் பிரச்னைகள் இன்று அதிகம் பேசப்படுபவையாக மாறியுள்ளன. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். 

Updated On : 16 டிசம்பர், 2021 at 12:50 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:14 PM

உடல்நலப் பிரச்னைகளைத் தாண்டி மனநலப் பிரச்னைகள் இன்று அதிகம் பேசப்படுபவையாக மாறியுள்ளன. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். 

மன அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்டவையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. 

அதிலும், குறிப்பாக கரோனா காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துக் காணப்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

Advertisement

இந்நிலையில் பெண்கள் அதிகமாக மது அருந்துவதற்குக் காரணம் குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள்  புதிய ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் 'சைக்காலஜி ஆஃப் அடிக்டிவ் பிஹேவியர்ஸ்'(Psychology of Addictive Behaviors) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், பெண்கள் மது அருந்துவதற்கும், அதிகமாக மது அருந்துவதற்கும் காரணம் அவர்களின் மன அழுத்தம் மட்டுமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ஆண்கள்தான், அதிக மன அழுத்தத்தில் இருந்தால் மதுவைத் தேடிச் செல்வார்கள். ஆனால், தற்போது பெண்களும் மன அழுத்தத்தில் இருந்தால் மது பழக்கத்தை நாடுவது அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சாதாரண பெண்களைவிட மன அழுத்தம் அதிகமாக இருக்கும் பெண்கள் அதிகமான மதுவைக் குடித்ததும், மன அழுத்தத்தை சரிசெய்யவே அதிகம் மது குடிப்பதாக அவர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், 'பெண்களைவிட ஆண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தாலும், பெண்களிடமும் இந்த பழக்கம் அதிகரித்து வருவது அதிக அபாயத்தை ஏற்படுத்தும். மதுப் பழக்கம், ஆண்களைவிட பெண்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

மன அழுத்தம் இருக்கும்போது குடிக்கும் சிலர் அந்தத் தருணத்தில் மட்டும் குடிக்கின்றனர். ஆனால், சிலருக்கு இதே பழக்கம் தொடர்கிறது. இந்த புதிய பழக்கம் அவர்களை பலவீனப்படுத்துகிறது. நாளடைவில் அவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். 

மன அழுத்தத்தினால் ஏற்படும் மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெண்களின் விகிதம் குறைவாக உள்ளது' என பேராசிரியரும், ஆய்வின் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான ஜூலி பாடோக்-பெக்காம் கூறினார்.

மன அழுத்தம் அதிகரிப்பு ஒழுங்கற்ற, அதிக குடிப்பழக்கத்தை ஏற்படுத்துவதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது. 

எனினும், மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதால் இதுகுறித்த ஆய்வுகள் மேலும் தேவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பெண்கள், எதிர்காலத்தைக் கருதி மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேறு வழிகளைக் கையாள வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.