டீன் - ஏஜ் மட்டுமல்ல! 10 வயது பெண் குழந்தைகளுக்கும் பிஎம்ஓஎஸ் சோதனை! ஏன்?
பிஎம்ஓஎஸ் தொடர்பான கேள்விகளும் மருத்துவரின் பதில்களும்....
- உன்னிகிருஷ்ணன். எஸ்
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது பெண்களுக்கு இனப்பெருக்கரீதியாக ஏற்படும் ஒரு கோளாறு. இதன் பெயரை மருத்துவரீதியாக தற்போது 'பாலிசிஸ்டிக் மெட்டபாலிக் மற்றும் ஓவரியன் சிண்ட்ரோம்' (பிஎம்ஓஎஸ்) என்று மாற்றியிருக்கிறார்கள். இது கருப்பை நீர்க்கட்டிகள் மட்டுமின்றி வளர்சிதை மாற்றம், மனநலம், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் என அனைத்தும் அடங்கிய கோளாறைக் குறிக்கிறது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைப் பிறப்பு மருத்துவத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ரெஜி மோகன், பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார்.
Advertisement
Advertisement
பெண் குழந்தைகளுக்கு பிஎம்ஓஎஸ் பரிசோதனையை எப்போது முதல் தொடங்க வேண்டும்?
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக முடி வளர்ச்சி, தொடர்ச்சியான முகப்பரு, எதிர்பாராத எடை மாற்றங்கள் போன்ற ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டால், சிறுமிகளுக்கு சுமார் 10 வயதிலேயே பரிசோதனையைத் தொடங்குவது சிறந்தது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதனை வழக்கமான பதின்பருவப் பிரச்னைகளாக நினைத்துப் புறக்கணிக்கின்றனர். ஆனால் இது உடலில் ஹார்மோன் சமநிலையின்மையைக்கூட குறிக்கலாம். எனவே குழந்தையின் 10 வயது முதலே கண்காணிப்பது நல்லது.
உடல் பருமன், குடும்பத்தில் பிஎம்ஓஎஸ் இருந்த வரலாறு அல்லது முன்கூட்டியே ஏற்படும் பருவ மாற்றங்கள் உள்ள சிறுமிகளுக்கு அதிக ஆபத்து உள்ளது. சரியான நேரத்தில் கண்டறிந்தால் இனப்பெருக்கரீதியாக மட்டுமின்றி நீரிழிவு, இதய நோய் போன்ற கடுமையான விளைவுகளைத் தடுக்கலாம்.
கண்டறிய ஏன் நேரமாகிறது?
பிஎம்ஓஎஸ் அறிகுறிகளான உடல் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக முடி வளர்ச்சி போன்றவை தைராய்டு கோளாறுகள், அட்ரீனல் சுரப்பி பாதிப்புகள் போன்றவற்றின் அறிகுறிகளை ஒத்திருக்கின்றன. இதனால் என்ன பாதிப்பு என கண்டறிவதில் சிரமம் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே பரிசோதனைகள் மேற்கொண்டால் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிந்து அதனை சரிசெய்யவும் முடியும்.
பெண்கள் பொது மருத்துவர்களை அணுகுவதால் அவர்களுக்கு சரியான பரிசோதனைகள், சிகிச்சைகள் கிடைக்காமல் போகிறது. அந்தந்த பிரச்னைகளுக்குரிய சிறப்பு மருத்துவரை அணுகினால்தான் தீர்வு கிடைக்கும்.
பிஎம்ஓஎஸ், மனநலப் பாதிப்புகளுடன் தொடர்புள்ளதா?
பிஎம்ஓஎஸ் பாதிப்புக்கு ஒருங்கிணைந்த பல துறை சிகிச்சை வளர்ந்து வருகிறது. சில மருத்துவமனைகள் மகப்பேறு, நாளமில்லாச் சுரப்பி, உணவியல், தோல் மற்றும் மனநல நிபுணர்கள் என பல துறை சார்ந்த மருத்துவர்கள் இணைந்து செயல்படும் சேவையை வழங்குகின்றன. இதனால் பாதிப்புகளையும் எளிதாகக் கண்டறிய முடியும். அதுவே சரியானதும்கூட. ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் மருத்துவ மையங்களை அணுகலாம்.
பிஎம்ஓஎஸ் கருத்தரித்தலில் சிக்கல்கள் ஏற்படுகிறதா? மேலும் உடல்நல அபாயங்கள் என்னென்ன?
பல பெண்கள் கருத்தரித்தல் தொடர்பான பிரச்னைகளுக்காகவே மருத்துவர்களை நாடுகின்றனர். இந்த நிலை மிக அதிக உடல்நலப் பாதிப்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீண்ட காலமாக அண்டவிடுப்பு சரியாக நடைபெறாதது ஆகியவை கருப்பை உட்சுவர் வளர்ச்சி, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
வளர்சிதை மாற்றக் கோளாறுகளான உடல் பருமன், குளுக்கோஸ் சகிப்புத்தன்மைக் குறைபாடு, ரத்தக் கொழுப்பு போன்றவை இதய நோய் மற்றும் வகை-2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. பதற்றம் மற்றும் மனச்சோர்வும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால் உளவியல்ரீதியான பிரச்னைகளுக்கு யாரும் தீர்வு காண்பதில்லை, பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை. பிஎம்ஓஎஸ் என்பதை இனப்பெருக்கப் பிரச்னையாக மட்டும் கருதாமல், அது வாழ்நாள் முழுவதுமான உடல் சார்ந்த பிரச்னையாக புரிந்துகொண்டு தொடர் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழில்: எம். முத்துமாரி
PMOS: Dont mistake it for typical teenage issues, when girl child to start checkup
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.